பெண்கள் மேக்கப்க்கு அதிக ஆர்வம் செலுத்தி வருவது...அமைச்சர் சொன்னது என்ன?

பெண்கள் மேக்கப்க்கு அதிக ஆர்வம் செலுத்தி வருவது...அமைச்சர் சொன்னது என்ன?

மேக்கப் போட்டுக்கொள்ள அனைவரும் அதிக ஆர்வம் செலுத்தி வருவது ஆரோக்கியமான விஷயம் என்று ஏ.ஐ.எம்.எஸ் பயிற்சி மைய தொடக்க விழாவில் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

ஏ.ஐ.எம்.எஸ் அழகியல் பயிற்சி மையம்:

சென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில்  ஏ.ஐ.எம்.எஸ் அழகியல் பயிற்சி மையத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பயிற்சி மைய இயக்குநர் வசந்த் ராஜகுரு உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், தான் ஒரு மருத்துவர் என்கிற வகையில் அழகியல் பயிற்சி மையம் தொடங்குவது நல்ல முயற்சியாக கருதுவதாக தெரிவித்தார்.

நல்ல முயற்சி :

தோல் பராமரிப்பு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்று கூறிய அவர், தான் கல்லூரியில் படித்த காலங்களில் ஓரிரு பெண்கள் மட்டுமே லிப்ஸ்டிக் போட்டு வருவார்கள் என்றார். இப்போது அனைவரும் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்றும், அது நேர்மறை எண்ணத்தை கொடுக்கும் என்றும் தெரிவித்தார். தோல்பராமரிப்பு தொடர்பாக கற்றுக்கொடுக்கும் இந்த பயிற்சி மையம் நல்ல முயற்சி என்றும் அவர் தெரிவித்தார். 

கூடுதல் சிறப்பைக் கொடுக்கும்:

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மைய இயக்குநர் வசந்த் ராஜகுரு,  ஏ.ஐ.எம்.எஸ் பயிற்சி மையத்தில் தோல் பராமரிப்பு, முகப்பரு சிகிச்சைகள், தழும்பு நீக்கம், தேவையற்ற ரோமங்களை நீக்குதல், உடல் வடிவமைப்பு, அழகியல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் வழங்கப்பட உள்ளதாக கூறினார். மேலும் தோல் பராமரிப்பிற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், சர்வதேச அளவில் நடைமுறைக்கு சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சைக்கான பயிற்சியை வழங்குவதால் இது பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு கூடுதல் சிறப்பைக் கொடுக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகைகள் அதுல்யாரவி, வித்யூராமன், தர்ஷாகுப்தா, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி உள்ளிட்ட பலதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.