கோடநாடு வழக்கு: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் தனிப்படைகள் இரண்டாவது நாளாக விசாரணை!

கோடநாடு வழக்கு: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் தனிப்படைகள் இரண்டாவது நாளாக விசாரணை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கண்ணனிடம், கோடநாடு  கொலை, கொள்ளை வழக்கில் நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக தனிப்படையினர் இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை , கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏற்கனவே இவருக்கு தொடர்பு இருந்ததா? அல்லது இந்த சம்பவத்திற்கு பிறகு கண்ணனை யாராவது தொடர்பு கொண்டார்களா? என்ற கோணத்தில் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட  கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

பின்னர் இவர்கள்  அனைவரும் ஜாமீனில்  விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் விசாரணை தீவிரமடைந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்கு கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோடநாடு வழக்கு தொடர்பாக 220 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மறைந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கண்ணனிடம், கோவை காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று விசாரணை நடத்திய நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.