வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...!! 

வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...!! 

திமுக கொண்டு வந்துள்ள வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.

நேற்று நிறைவடைந்த நிதிநிலை அறிக்கை கூட்டதொடரில் இறுதியாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிக்கும் விதமாக தொழிலாளர் சட்ட திருத்த மசோதா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனால் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மனித நேய மக்கள் கட்சி போன்றவை இச்சட்ட மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. கூட்டணி கட்சிகளின் எதிப்பையும் மீறி இம்மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதனால் விசிக, சிபிஐ, சிபிஎம், மனித நேய மக்கள் கட்சி போன்றவை அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில் இச்சக்கட்ட மசோதாவை எதிர்த்து இந்திய பொதுவுடைமை கட்சி ( மார்க்சிஸ்ட்) அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில்,  இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும்  150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்ற ஒன்றைச் சொல்லி அதை இல்லாமல் செய்வது  தவறான நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும் என எச்சரித்த அறிக்கையில் பாஜக ஏற்கனவே கொண்டு வந்துள்ளதை அனைவரும் எதிர்த்துள்ளதாகவும், இந்தியாவிலேயே  இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசு தான் எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய நகர்ப்புற உழைப்பாளர்கள்  வாரத்திற்கு 60 மணி நேரம், 47 நிமிடங்கள் நேரடியாக வேலை மற்றும் வேலைத் தொடர்பான காரணங்களுக்கான செலவிடுகிறார்கள் என்று தேசிய புள்ளியியல் துறை 2019ம் ஆண்டு வெளியிட்டிருந்த இந்தியாவில் நேரப்பயன்பாடு குறித்த ஒரு அறிக்கையை குறிப்பிட்டு எட்டுமணி நேர வேலை சட்டப் படியாக இருக்கும் பொழுதே இந்த நிலைமை என்றால் அரசு சொல்கிற நெகிழ்வுத் தன்மை வந்துவிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து, அதிக அளவு தொழிலாளர்கள் வேலை வாங்கப்படும் நாடுகளில் காம்பியா, மங்கோலியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மட்டும்தான் இந்தியாவிற்கு பின்னே இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருப்பதை கூறி, 2020ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை  திமுக கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்டயுள்ளது. 

மேலும், மத்திய அரசு பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டுமணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்ததாக நினைவு கூறியது.

மேலும், நெகிழ்வுத்தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும் எனக் கூறிய அவ்வறிக்கை தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசேதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது.

கூடுதலாக, 150 ஆண்டுகாலம் போராடி, பலர் உயிர் துறந்து, பலர் வேலை இழந்து, குடும்பத்தை இழந்து சிறைக்குச் சென்று பெற்ற உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் இழக்க முடியாது என்றும் இந்த மசோதா சட்டமாகாமல் கைவிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக தொடர்ச்சியாக போராடும் என்றும் கூறப்பட்டுள்ளது.