நாம் பச்சைத் தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர்..முதலமைச்சர் புகழாரம்...

நாம் பச்சைத் தமிழர் என்றால் மகேந்திர சிங் தோனி மஞ்சள் தமிழர் என முதலமைச்சர் முக ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

நாம் பச்சைத் தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர்..முதலமைச்சர் புகழாரம்...

14-வது ஐபிஎல் சீசனில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், 
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷ் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு 7ம் நம்பர் பொறித்த ஜெர்சியும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தோனி, சென்னை அணி தனக்கு நிறையக் கற்றுக் கொடுத்துள்ளதாகக் கூறினார். மாற்று அணி வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள் எனத் தெரிவித்த அவர், தனது கடைசிப்போட்டி சென்னையில் தான் எனக் குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தான் மட்டுமல்லாது தனது குடும்பமே தோனியின் ரசிகர்கள் தான் எனத் தெரிவித்தார். தமிழர்கள் பச்சைத் தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் எனவும் கூறினார்.