ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் ...பாதிக்கப்பட்ட பெண் ஆவேசம்...

யூடியூபில் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றி வரும் ரவுடி பேபி சூர்யாவை தட்டிக் கேட்பவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை ஆபாச வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு, மிரட்டுவதாக ரவுடி பேபி சூர்யா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளார்.

ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் ...பாதிக்கப்பட்ட பெண்  ஆவேசம்...

கடந்த சில நாட்களாக டிக்-டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ரவுடிபேபி சூர்யா குடும்பப் பிரச்சனைகளில் சிக்கி கஷ்டத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தனம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேடவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணான தனம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது இரு குழந்தைகளும் ஆன்லைன் வகுப்பிற்காக தனது செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும், அப்போது ரவுடிபேபி சூர்யா வெளியிட்ட ஆபாசப் பேச்சுக்கள் நிறைந்த வீடியோக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், அவரை தொடர்பு கொண்டு இது குறித்து முறையிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தன்னை பழி வாங்க ரவுடிபேபி சூர்யா, ஆண் நண்பருடன் இணைந்து தனது புகைப்படம் மற்றும் தொடர்பு எண்ணை சமூக வலைதள பாலியல் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனால் கடந்த 3 மாதங்களாக தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தனக்கு அரசியல் பின்புலம் இருப்பதாகவும், காவல் துறையிலிருந்து முதலமைச்சர் வரை யாரிடம் சென்று புகார் அளித்தாலும் தன்னை எதுவும் செய்ய முடியாது என ரவுடிபேபி சூர்யா பொதுவெளியில் வீடியோ பதிவிட்டு மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் ரவுடிபேபி சூர்யாவின் செயல்பாடுகளை தட்டிக்கேட்கும் யாராக இருந்தாலும், அவர்களின் குடும்பப் பெண்களை குழந்தைகள், பெரியவர்கள் என வித்தியாசம் பாராமல் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலை தளத்தில் ரவுடிபேபி சூர்யா பதிவிட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்த அவர், ரவுடி பேபி சூர்யாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், இது தொடர்பாக காவல்துறை, அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் கூறினார்.