"படித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.". - சரத்குமார் ...!

"படித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.".  - சரத்குமார் ...!


நடிகர்  சரத்குமார் தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து தான் படித்த  புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.

'பொன்னியின்  செல்வன்':...
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சரத்குமார், எண்ணற்ற வெற்றி படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போதும் நாயகனாகவும், அதேசமயம் முன்னணி இளம் ஹீரோக்களின் திரைப்படங்களில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சரத்குமார் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளிவந்த 'பீஸ்ட் ' படத்தில் நடித்திருந்தார்.  காவியப் படமான 'பொன்னியின்  செல்வன்' படத்தின் 2 பாகங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். 
இவர் இன்று தனது  வீட்டு நூலகத்திலிருந்து தான் படித்து மகிழ்ந்த சுமார் 6000 புத்தகங்களை மக்களுக்காக அன்பளிப்பாக அளிக்க இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து அவர் பேசுகையில், 

என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற.....

“நான் படித்த புத்தகங்கள், எனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்கள் மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.  இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன்.

இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்று சொன்னால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் படித்திருக்கிறேன். அந்த பண்பை பழகிக்கொண்டும் இருக்கிறேன். என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள்.

புத்தக வாசிப்பு குறைந்துள்ளது:..

இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன். நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்குவோருக்கு புத்தகத்தில் நான் கையெழுத்திட்டு தந்து வருகிறேன். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் கைபேசி, அமேசான் கிண்டில், ஐபேட், மடிக்கணினி ஆகியவைகளால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. இதனால் புத்தக வாசிப்பை மேலும் முன்னெடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

இதே போல பிறரிடம் புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று சரத்குமார் கூறினார். இந்த முன்முயற்சியின் பலனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் இருக்கும்  அறிவுச்செல்வத்தை பிறரிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைவதாகக்  கூறியிருக்கிறார். அவரின்  இந்த புதிய முயற்சிக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. 

 இதையும் படிக்க ;..'ப்ராஜெக்ட் கே' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!!!

  https://www.malaimurasu.com/posts/entertainment/Project-K--Making-Video-Released