தாம்பரம்: மீட்கப்பட்ட இடத்தில் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு!

 தாம்பரம்: மீட்கப்பட்ட இடத்தில் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு!

தாம்பரத்தில் தனியார் கல்வி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் புதிய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியை தொடங்கி, விரைந்து முடிக்கும்படி தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1944 ஆம் ஆண்டு சென்னை தாம்பரத்தில்  9 ஏக்கர் 77 செண்ட்  நிலத்தை பல்வேறு நிபந்தனைகளுடன் 'வள்ளுவர் குருகுலம்' என்ற கல்வி நிறுவனத்துக்கு அரசு ஒதுக்கியது.

இதில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள 4 ஏக்கர் 77 செண்ட் நிலம் இது வரை பயன்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது.

பயன்படுத்தப்படாமல் உள்ள நிலத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட முடிவெடுத்த அரசு அந்த நிலத்தை மீட்டெடுத்தது.

இந்நிலையில், அரசு ஒதுக்கிய 9.77 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா வழங்க உத்தரவிடக்கோரி  'வள்ளுவர் குருகுலம்' கல்வி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்வி பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தின் எதிரே தனியார் நிலத்தை வாங்கிய இந்த கல்வி நிறுவனம், அந்த இடத்தை நர்சிங் கல்லூரி, பெட்ரோல் பங்க், உணவகங்கள் உட்பட பல தனி நபர்களுக்கு வாடகை விட்டு பெரிய அளவில் வருமானம் ஈட்டு வருவதால், அரசு ஒதுக்கிய நிலத்துக்கு பட்டா வழங்க கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு விதித்த நிபந்தனைகளை  கல்வி நிறுவனம் மீறியதுடன், நிலத்தை பயன்படுத்தப்படாமல் உள்ளதால்  நிலத்துக்கு பட்டா வழங்கும்படி உத்தரவிட முடியாது என மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார். 

மேலும்,  தாம்பரம்  காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தில்,  ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளை துவங்கி விரைந்து முடிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:"சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது" -தூர்தர்ஷன்!