தூத்துக்குடி துப்பாக்கி சூடு "மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு கிடைத்தா?" உயர்நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின்  புலன் விசாரணை பிரிவின் அறிக்கை கிடைத்துள்ளதா என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், வழக்கை முடித்து உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தார்.

இந்த வழக்கில், தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை முடித்த வைத்த உத்தரவையும், புலன் விசாரணை பிரிவு அறிக்கையையும் மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் ஆணையம் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, பலியானவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது என போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுகொண்டபோதும், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்தார். விதிகளை மீறி மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஆணையம் தரப்பில், புதிதாக ஏதும் ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம் என உத்தரவிடபட்டுள்ளதாகவும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் வாதிடப்பட்டது.

பின்னர், சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை ஆகியவை அரசுக்கு கிடைத்துள்ளதா, இல்லையா என விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அறிக்கை கிடைத்திருந்தால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்