குரூப் 4 தேர்வு தொடங்கியது....!
2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குரூப் 4 தேர்வு:
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 32 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்தேர்வை, 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்கள், 9 லட்சத்து 35 ஆயிரம் ஆண்கள், 131 மாற்று பாலினத்தவர் உட்பட 22 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
கட்டுப்பாடுகள்
கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், காகித துண்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஹெட் போன்கள் மற்றும் ப்ளூடூத் கருவிகள், பேனா கேமிராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள், தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
இதனிடையே, தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் இன்று நடைபெறும் நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தேர்வு மையங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையின்படி தேர்வு மையங்களின் எண்ணிகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடங்கியது குரூப் 4:
தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெறும் என அறிவித்தப்படி, தேர்வு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.