அரசு வேலைக்காக காத்திருப்போர் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு...!

அரசு வேலைக்காக காத்திருப்போர் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு...!

தமிழ்நாடு முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேரும் பதிவு செய்து உள்ளனர்.

இதையும் படிக்க : "அமைச்சர் துரைமுருகன் தனது மகளை ரகசியமாக காதலனுடன் பேச அனுமதிப்பாரா?" முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் கேள்வி!

31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6ஆயிரத்து 111 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர். 

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடைய ஆண்கள் 74 ஆயிரத்து 503 பேரும், பெண்கள் 38 ஆயிரத்து 513 உட்பட 1 லட்சத்து 13 ஆயிரத்து 016 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 271 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 577 பேர் உள்பட 17 ஆயிரத்து 848 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அதேபோல், காதுகேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 519 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 538 பேர் உள்பட 14 ஆயிரத்து 057 பேர் பதிவு செய்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 33 ஆயிரத்து 321 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 47 ஆயிரத்து 186 நபர்கள் என மொத்தம் 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.