தங்க கவசம் வழக்கு: ஓபிஎஸ் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை..!

தங்க கவசம் வழக்கு: ஓபிஎஸ் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை..!

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு உரிய தங்க கவசத்தை அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசனிடம் வழங்கக்கோரிய வழக்கில், ஓ.பி.எஸ் தரப்பு அக்டோபர் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனாரின் குருபூஜை வருகின்ற 30ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மதுரை அண்ணா நகர் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும் தங்க கவசத்தை வரும் 30 ஆம் தேதிக்குள் தங்களிடம் வழங்க வேண்டும் என  அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் திரு உருவ சிலைக்கு தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். குருபூஜையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.

தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது. எனவே வருகிற 30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்”,  என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என வாதாடினார்.

அதை மறுத்த நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே வருகிற 10-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   | “அமைச்சர் பேச்சு குறித்து ஆதாரங்களை தாக்கல் செய்க” - சென்னை உயர்நீதிமன்றம்