தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று வெளியாகிறது

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரங்களை மதுரை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று வெளியாகிறது

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர்.

நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கு விசாரணை, கோகுல்ராஜ் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வெளியானது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின்  நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.  முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். அதேவேளையில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு  நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ஆதிக்க மனப்பான்மையில் அப்பாவி இளைஞரை கொலை செய்த யுவராஜ் உள்ளிட்ட கொடூர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.