சென்னையில் முதல் மரபணு ஆய்வகம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்...

ஒரே நேரத்தில் 1000 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் உருமாற்றம் அடையும் கொரோனா வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னையில் முதல் மரபணு ஆய்வகம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்...

இந்தியாவில் கொரோனா வைரசின் உருமாற்றத்தை கண்டறிய 10 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரு ஆய்வகம் கூட இல்லை. தற்போது, உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸை கண்டறிய, மாதிரிகள் பெங்களூரு அல்லது புனே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால், தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரசை கண்டறிய ஆய்வகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வகத்தை இயக்குவதற்கு, 6 பேர் கொண்ட குழுவினர் பெங்களூருவில் சிறப்பு பயிற்சியை முடித்து தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் பணிபுரிவதற்காக மேலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன், இந்த மரபணு ஆய்வகத்தில் உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.