மின் கட்டணத்தில் ஜி.எஸ்.டி. இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்... அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி...

விவசாயிகள் நலனில் தமிழக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தில் ஜி.எஸ்.டி. இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்... அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி...

விவசாயிகள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு. 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்து 4.50 லட்சம் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின் துறையில் இதர பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் என்பது கடந்த ஆட்சியிலேயே  2018ல் இருந்தே கொண்டு வரப்பட்டது.புதிதாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதை போல எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கூறி வருகிறார். மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி என்பது 53 சதம் மட்டுமே. 2017 ம் ஆண்டிலேயே விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்துவது தொடங்கப்பட்டது. இப்போதுதான் மீட்டர் பொருத்தப்படுவது போல அறிக்கையை ஓ.பி.எஸ். வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவது அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும்,  தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கி அதற்கான மானியத்தை  தமிழக அரசு வழங்கி வருகிறது. அவர்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கையும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று வரலாறு தெரிந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட வேண்டும்.தமிழகத்தில் 17 சதவிகிதம் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் போது இழப்பு ஏற்படுகிறது.  மின்மாற்றிகளில் டி.பி மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் அதற்கான அறிவிப்பு இந்த கூட்டத் தொடரில் வரவுள்ளது.

மின் வாரியத்தில் 3 ல் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளது.  மாதாந்திர கணக்கெடுக்க இரண்டு பங்கு ஊழியர்கள் தேவை. விரைவில்  மாதாந்திர கணக்கெடுப்பு செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.சென்னை மாநகராட்சியில் பூமிக்கடியில் மின்பாதை அதிகரிக்கப்பட்ட பிறகு மற்ற மாநகராட்சிக்கு முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்தப்படும்.

விவசாய நிலங்களுக்கு மேல் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் போராடி வருவது குறித்த கேள்விக்கு உயர் மின்கோபுரம் அமைப்பதால்,  இழப்பீடு பெறாத விவசாயிகள் பட்டியல் அளித்தால், ஒரு மாத காலத்துக்குள் இழப்பீடு வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

ஏற்கனவே ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட விவசாயிகள் இரட்டிப்பு இழப்பீடுக்காக கேட்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின் உற்பத்திக்காக அந்தந்த மாவட்டத்திலே சூர்ய மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்றார்.