முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் ஜி.ராமகிருஷ்ணன்....!
12 மணி நேரம் வேலை சட்ட முன்வடிவை திரும்பப் பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதா குறித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது.
இந்நிலையில் 12 மணி நேரம் வேலை சட்ட முன்வடிவை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : 12 மணி நேரம் வேலை: முதலமைச்சருக்கு நன்றி சொன்ன வைகோ...!
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், மே தினத்தை முன்னிட்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் 8 மணி நேர வேலைக்காக ரத்தம் சிந்தி போராடி பெற்ற நாள் தான் உழைப்பாளர் தினம் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு உழைப்பாளி மக்களின் உரிமைகளை பறித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், 12 மணி நேர வேலை சட்டமசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப பெற்றது வரவேற்கத்தக்க ஒன்றாகும், எனவே, இதனை திரும்பப் பெற்ற முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.