முன்னாள் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா மறைவு...!

முன்னாள் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா மறைவு...!

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியமான நரேஷ் குப்தா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

முன்னாள் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான  திரு நரேஷ் குப்தா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 72 வயதாகும் இவர் இதய நோய் காரணமாக கடந்த 5ஆம் தேதி கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று மாலை 4:20 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நரேஷ் குப்தா அவரது மகன் மனிஷ் குப்தா மற்றும் மருமகள் ஜபல்பூர் உடன் சென்னை அண்ணாநகர் ஆபீஸர்ஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நரேஷ் குப்தாவின் இறுதி சடங்கு அண்ணாநகர் ஆபீஸர்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது  சொந்த ஊரான உத்திரபிரதேசம்  மாநிலம் லக்னோவில் இருந்து அவரது உறவினர்கள் வருவதற்கு  24 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்ற காரணத்தினால் தற்பொழுது அவரது பூத உடலானது சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. 
மேலும் இவரது இறுதி சடங்கு  வருகின்ற  12ஆம் தேதி புதன்கிழமை அன்று அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் குடும்ப  வழக்கத்தின்படி நடைபெறும் எனவும், அவரது உடல் எங்கு தகனம்  செய்யப்பட உள்ளது என்பது குறித்து புதன்கிழமை தெரியவரும் எனவும் குப்தாவின் மகன் தெரிவித்தார்.
 
 நரேஷ் குப்தாவின் மறைவிற்கு அவரது  நண்பர்கள், உடன் பணியாற்றவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது  இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.