கனமழையால் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!
சென்னை: சென்னையில், இடி மின்னலுடன் கனமழை பெய்துவருவதால், 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இடி மின்னல், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன.
துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உட்பட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமட்டு பறந்தன. பின்னர் 10 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. காலை 6 மணிக்கு பின் வானிலை சீரானதும் விமானங்கள் சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், பிராங்க்பார்ட், துபாய், அந்தமான், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கனமழை காரணமாக பன்னாட்டு விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: கீழடி அருங்காட்சியம் : 100 நாட்களில் 2.25 லட்சம் பேர் வருகை!