மீனவர்களை மிரட்டி பொருட்கள் சூறை - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, இலங்கை கடற்கொள்ளையர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மீனவர்களை மிரட்டி பொருட்கள் சூறை - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மாலை சின்னத்தம்பி, சிவா, பெருமாள்,விவேக் ஆகிய 4 மீனவர்களும்,  சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் 4 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு படகில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை வழிமறித்து படகில் இருந்த வாக்கிடாக்கி, ஜிபிஎஸ் கருவி, செல்போன் பேட்டரி, டீசல், லைட்டு உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்புடைய பொருட்களை பறிக்க முயன்றுள்ளனர்

பொருட்களை கேட்டும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் மீனவர் சிவாவை கத்தியை காட்டி மிரட்டி கடலில் குதிக்க வைத்துவிட்டு பின்னர் பொருட்களை பறித்து சென்றுள்ளனர். அதன்பின்னர் நடுகடலில் உயிருக்கு போராடிய சிவாவை மீட்ட மற்ற மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இது குறித்து வேதாரண்யம் கடலோர குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.