மீன் வலையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாலமான் ஓடையில் மீன் வலையில் நாட்டுத் துப்பாக்கி கிடைத்த நிகழ்வு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மற்றும் ராஜாராமன். சகோதரர்களான இவர்கள் இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலைநகரில் உள்ள சக்கரா அவன்யூ பின்புறம் உள்ள பாலமான் ஓடையில் சகோதரர்கள் இருவரும் வலை போட்டு மீன் பிடித்துள்ளனர். அப்போது இவர்களின் வலையில் துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர் அந்த துப்பாக்கியை சகோதரர்கள் இருவரும் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் அதை பரிசோதனை செய்ததில், சுமார் 140 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. 3 கிலோ எடை கொண்ட இந்த துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அது நாட்டுத்துப்பாக்கி என்பதும், பழங்குடியினர் பயன்படுத்துவதைப் போன்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து துப்பாக்கிக்கு உரிமையாளர் யார்? எதற்காக அந்த துப்பாக்கி ஓடைப்பகுதிக்கு வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க || உயர் நீதிமன்றத்தில், பாதுகாக்கப்பட வேண்டிய வழக்கு ஆவணங்கள் திருட்டு!!