எரிபொருள் விலையை அபரிமிதமாக உயர்த்திய மத்திய அரசு..! வரிஉயர்வை குறைத்திட முன்வரவேண்டும் - பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அபரிமிதமாக விதித்து வரும் மத்திய அரசு, அதனை குறைக்க முன்வர வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை அபரிமிதமாக உயர்த்திய மத்திய அரசு..! வரிஉயர்வை குறைத்திட முன்வரவேண்டும் - பழனிவேல் தியாகராஜன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை   குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் அடம்பிடிப்பதை விடுத்து மக்களுக்கான பலனை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசே கலால் வரியை குறைக்கும்படி வலியுறுத்தியுள்ளார். 

மேலும் பிரதமர் மோடி தலைமையில்  பாஜக ஆட்சி அமைந்த  பிறகு எரிபொருளுக்கான வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கடந்த  8 ஆண்டுகளில் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 200 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரி 500 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் சாடியுள்ளார். எனவே உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை 2014 ஆம் ஆண்டில் இருந்தது போல குறைக்குமாறு பிரதமரை அவர் வலியுறுத்தியுள்ளார். கூட்டாட்சியின் உண்மையான உணர்வில் தமிழக அரசு வைத்துள்ள இந்த நியாயமான கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.