கொப்பரை தேங்காய்; கிலோ ரூ.140 வழங்க விவசாயிகள் கோரிக்கை!
கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நுதன போராட்டம் நடத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தேங்காய்களை உடைத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கேரளாவை போல் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடை மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை விற்பனை கூடம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டடனர். தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கேட்டு விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தேங்காயை நேரடி கொள்முதல் செய்வதாக மத்திய அரசு அறிவித்தாலும் இதுவரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யவில்லை என போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தேங்காய்க்கு கட்டுபடியான விலை கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க:"காலணி எரித்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டிஎஸ்பி"; நடந்தது என்ன?