ஏரி நிரம்பியும் பயனில்லை... விவசாயிகள் வேதனை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான வைரமேக தடாகம் என்னும் உத்திரமேரூர் பெரிய ஏரி சுமார் 3000 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுமார் ஒரு மாத காலத்தில் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி, நீர் வெளியேறி வருகிறது.

விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வரும் நிலையில், ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விலை நிலங்களுக்கு முறையாக தண்ணீர் சொல்ல முடியாத சூழல் உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் உத்திரமேரூர் பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான உத்திரமேரூர் ஏரியை தூர் வாரும் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும், தற்சமயம் ஏரி ஆழமில்லாததால் ஏரியில் இருக்கும் தண்ணீர் ஒரு போகத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதாலும் ஏரி நிரம்பினாலும் விவசாயத்திற்கு பயனில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.