திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் கடந்துவிட்ட பின்னும் கடந்த ஆட்சியை குறை கூறுவதா....பிரேமலதா விஜயகாந்த் சாடல்..!
திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் கடந்துவிட்ட பின்னும் கடந்த ஆட்சியை குறை கூறுவதா என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துடன் இணைந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக் கூறினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
திருவொற்றியூர் கட்டட விபத்தை பார்வையிடச் செல்லாத முதலமைச்சர் , திரு வி.க நகருக்கு திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக நேரில் சென்றது தவறான முன்னுதாரணம் என்றும் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படியான செயலில் ஈடுபட கூடாது என்றார்.
எதிர் கட்சியாக இருந்தபோது go back modi என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது, அரசியல். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுக தற்போது ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் தயவு தேவைப்படுகிறது என கூறினார்.
தேமுதிகவை பொறுத்தவரை, கட்சியின் செயல் தலைவர் பொறுப்பு ஏற்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்... யாரை செயல் தலைவராக்குவது என்று தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் முடிவு செய்வார் என்றார்.
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரேடரை குறைசொல்லும் லெட்சனத்தில் அரசாங்கம் இருக்கிறது என கூறிய அவர், யாராக இருந்தாலும் கமிசன் , கரப்சனுக்கு அடிபணியாமல் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும் திமுக ஆட்சியிலும் நீட் மரணம் தொடரவே செய்கிறது. நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதில் உறுதியான முடிவை திமுக மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்த் வந்ததற்கே இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது , இதிலிருந்து கட்சி பலவீனமாக இல்லை என்பது தெரியவரும் , தேமுதிக பலவீனமாக இருப்பதாக சிலர் கூறுவது பார்ப்போர் கண்ணோட்டத்தை பொறுத்தது என்றும் ஆட்சியில் இருந்தோரே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயங்கினாலும் சவாலை எதிர்கொண்டு தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்" என்று கூறினார்.