முட்டையின் கிடுகிடு விலை உயர்வுக்கு காரணம்? பண்ணையாளர்கள் சொல்வது என்ன?

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்வை எட்டியுள்ளது.

முட்டையின் கிடுகிடு  விலை உயர்வுக்கு காரணம்? பண்ணையாளர்கள் சொல்வது என்ன?

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.5.25 ஆக இருந்தது. ஆனால் முட்டை விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதலே முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.35 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நாமக்கலில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது தான். அதன்படி தான் முட்டை விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது கோழிப்பண்ணை வரலாற்றிலே இல்லாத உச்சபட்ச விலை உயர்வாகும்.  

முட்டை விலையின் திடீர் உயர்வு குறித்து பண்ணையாளர்கள் பேசிய போது, “தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இது கோடைக்காலம் என்பதால் துவக்கத்திலேயே அதிகளவு  வெப்பத்தினால் வயதான கோழிகள் இறந்துவிடும் என்பதால் அவற்றை பண்ணையாளர்கள் விற்பனை செய்துவிட்டனர்.

இதன் காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதனிடையே தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்திற்காகவும் தினசரி சராசரியாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதால் விற்பனைக்கு முட்டைகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, தான் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.