"மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆசை... ஆனால் உரிமை கிடையாது" துரைமுருகன் கருத்து!

"மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆசை... ஆனால் உரிமை கிடையாது" துரைமுருகன் கருத்து!

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆசை உள்ளதாகவும் ஆனால் அதற்கு உரிமை கிடையாது எனவும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளில்
தூர் வாரும் பணிகளையும், அந்தப் பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும்  மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது, பொதுமக்களின் வசதிக்காக சுற்றுலா இடத்தை விரைந்து சரி செய்யும் படியும் ஏரிகளில் நீர்வரத்து கால்வாய்களை தாமதப்படுத்தாமல் விரைந்து தூர் வாரும்படியும் அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை தொடர்பான பிரச்சனையில், கர்நாடக அரசு அணை கட்ட முடியாது. ஆனால் கர்நாடகா அரசு கட்டுவோம் என்று சொல்வார்கள். அது அவர்களுடைய ஆசை ஆனால் உரிமை கிடையாது. அதை தடுக்க உரிமை உண்டு
அணை கட்டக் கூடாது என்று சொல்வதற்கு நமக்கு உரிமை உண்டு. நீதிமன்ற அறிவுறுத்தலும் அப்படித்தான் உள்ளது என தெரிவித்தார்.

மேகதாது அணையில் இருந்து இயற்கையாகவே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், பில்லி குண்டு அணை வரையில் 80 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வருகிறது எனவும்  இயற்கையாக வருகின்ற இடத்தில் தான் அணை கட்டுவோம் என்று சொல்வது உகந்தது அல்ல எனவும் கூறினார்.

மேலும், முதலில் மத்திய நீர் மேலாண்மை வாரியம் மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதி, வனத்துறை அனுமதி
கிடைக்க வேண்டும் எனக் கூறிய அவர்,  அப்படி கிடைத்தாலும் அதன் பிறகு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறினார். எனவே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது என உறுதி யளித்த துரைமுருகன் கர்நாடகத்தினர் அரசியலுக்காக இதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் கனிமவளத் துறையில்1200 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், தற்போதுள்ள அரசு அதனை நிவர்த்தி செய்து, 1600 கோடி ரூபாய் லாபத்தில் கனிம வளத்துறை இயங்கி வருவதாகவும் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாலாற்றில் பல இடங்களில் அணைகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தற்போது வேலூர் அருகே சேண்பாக்கம்,பொய்கை திருப்பாற்கடல் உள்ளிட்ட 15 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இதையும் படிக்க:மாற்றுத் திறனாளிகளையும் மகிழ்வித்த கோவை ஹேப்பி ஸ்ட்ரீட்!