தொழிற்சாலை கழிவுகளால்...! நுரையாக பொங்கி வரும் தென்பெண்ணை...!!
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்று நீரானது அதிகப்படியான நுரைப்பொங்கி வருகிறது.
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்கதிற்கு இன்று விநாடிக்கு 340 கனஅடிநீர் வரத்தாகவும் 340 கனஅடி நீரானது 3 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.
அணையின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 41.49அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது "கர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரை ஒரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக வெள்ளை நிறத்தில் பணிப்போர்த்தியது போல் நுரை பொங்கி வழிகிறது. இதனால் நீர் தேக்கப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது." என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நீரை குடிக்கவும் பாசனத்திற்கு பயன்படுத்தவும் அச்சமாக உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.