அரை நிர்வாணமாக ஜிம்மில் நுழைந்த போதை ஆசாமி!
அரை நிர்வாணமாக உடற்பயிற்சி கூடத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்ப்பட்டது
போதையில் ஜிம்மில் நுழைந்த நபர் :
சென்னை மைலாப்பூர் பாஷா தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அரசு உடற்பயிற்சி கூடத்தில் நேற்றிரவு திடீரென ஒருவர் கஞ்சா போதையில் புகுந்துள்ளார். பின்னர், அங்கு பயிற்சியில் ஈடுபட்ட நபர்களை தாக்கியும், அங்கிருந்த உபகரணங்களையும் அந்த போதை ஆசாமி சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொதுமக்களை மிரட்டிய போதை ஆசாமி :
பின்னர் அவர், தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் விசாரணை :
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர், அராஜகத்தில் ஈடுபட்ட போதை ஆசாமியை பிடித்து விசாரிக்க முற்பட்டனர். அப்போது போதை ஆசாமி பிளேடால் உடலில் அறுத்துக்கொண்டு, தன்னை பிடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் போலீசாரையும் வெட்டிவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் திகைத்து போன காவலர்கள், போதையில் தள்ளாடிய நபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் அராஜகத்தில் ஈடுபட்ட அந்த நபர், அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பதும், ஏற்கனவே இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இணையத்தில் வைரலான வீடியோ :
கஞ்சா போதையில் ஜிம்மில் புகுந்து அட்டூழியம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.