110 பவுன் நகை, 32 லட்சம் காசும் பத்தலா!.. வரதட்சணை கேட்டு பெண் மருத்துவரை கொடுமைப்படுத்திய மருத்துவர் அதிரடி கைது:...
ஈரோட்டை சேர்ந்த அரசு பெண் மருத்துவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு அடுத்த கே.கே நகரை சேர்ந்தவர் திவ்யா. அரசு மருத்துவரான இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த அரசு மருத்துவரான அனுப் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், திருமணத்தின் போது திவ்யா குடும்பத்தினர், வரதட்சனையாக 110 சவரன் நகையும், ரொக்கமாக 32 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அனுப் மற்றும் அவரது தந்தை சம்பத் இருவரும் சேர்ந்து மருத்துவர் திவ்யாவிடம் தொடர்ச்சியாக வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர் திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் விசாரணை நடத்தியதில், மருத்துவர் திவ்யாவை கொடுமைப்படுத்தியது உறுதியானதையடுத்து மருத்துவர் அனுப்பை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே மருத்துவர் அனுப் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதால் அவருக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு போலீசார் சிறையில் அடைத்தனர். வரதட்சணை வாங்கி கொடுமைப்படுத்திய மருத்துவர் அனுப் இந்திய மருத்துவ சங்கத்தின் இணை செயலாளராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.