சிறுமிக்கு அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர்...பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம்!
கடலூர் அரசு மருத்துவமனையில் சளிக்காக சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலுார் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான இவர், 8-ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் சாதனாவை சளி பிரச்சனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து மருத்துவரின் மருந்து சீட்டுடன் சென்ற சிறுமிக்கு, அங்கிருந்த செவிலியர்கள் 2 ஊசிகளை செலுத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கருணாகரன் மருந்து சீட்டை பார்க்காமல் என்ன ஊசி செலுத்தினீர்கள் என கேட்ட போது, நாய் கடிக்குத்தான் 2 ஊசி போட்டோம் என செவிலியர்கள் அலட்சியமாக கூறியுள்ளனர்.
இதையும் படிக்க : வெளுத்து வாங்கும் கனமழை : மாநிலங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!
அப்போது, திடீரென மயங்கி விழுந்த சிறுமி சாதனா, உடனடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை கருணாகரன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, சளிப் பிரச்சனைக்காக வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.