12ஆம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்...! திமுக கூட்டணி கட்சிகள்...!!

12ஆம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்...!  திமுக கூட்டணி கட்சிகள்...!!

ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகளான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில், வரும் 12ஆம் தேதி அன்று மாலை 4.00 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 


இது தொடர்பாக திமுக கூட்டணி காட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.இரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார். அதிலும் குறிப்பாக சனாதனத்துக்கும் வர்ணாசிரமதர்ம முறைகளுக்கும் ஆதரவாக அவர் பொதுமேடைகளில் எடுத்து வைத்த கருத்துக்கள் அபத்தமானவை" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.  

மேலும், "மாநிலங்களில் மரபு சார்ந்த ஒரு அதிகாரப் பதவியில் இருப்பவர் ஆளுநர். அமைச்சரவையின் முடிவுகளைச் செயல்படுத்துபவர். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குபவர். ஒப்புதல் வழங்க மறுத்து, மீண்டும் அதனை சட்டமன்றத்திற்கு அனுப்ப அவருக்கு அதிகாரம் உண்டு. சட்டமன்றம், மீண்டும் அந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் தந்தாக வேண்டும். இவ்வாறு சட்டமன்றம் - மாநில அமைச்சரவை விருப்ப அதிகார எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியவரே ஆளுநர் ஆவார். இப்படித்தான் அரசியலமைப்புச் சட்டமும் சொல்கிறது. உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் சொல்கின்றன. இம்முறைப்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவதும் இல்லை. மாறாக மீறியும் செயல்பட்டு வருகிறார்." என குறிப்பிட்டு உள்ளனர்.

தொடர்ந்து "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு இன்னமும் அனுமதி தராமல் தாமதித்து வைத்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவதூறு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும் -ஸ்டெர்லைட் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் - அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று ஒரு ஆளுநர் நினைப்பாரே ஆனால் அத்தகைய ஆளுநர் எங்களுக்குத் தேவையில்லை என்பதே எங்களது இறுதியிலும் உறுதியான நிலைப்பாடு ஆகும்." என அக்கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளதது.

முன்னதாக, ஆளுநர் கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது ஸ்டெர்லைட் போராட்டம் , ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா போன்றவை குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறிப்பிட தக்கது.