"தொடர் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்".. நிவாரணம் வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூரில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்ததன் காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்ததால் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பயிர்கல் பல்லாயிர கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது. நல்ல மகசூலை பெறுவதற்காக விவசாயிகள் ஏராளமான செலவுகளை செய்திருந்தனர்.
நெற்கதிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திட்டை, மெலட்டூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துள்ளன. மழை பெய்து ஒரு வாரம் ஆகியும் வயல்வெளிகளில் தண்ணீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளதால் 200 ஏக்கர் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு தேவைக்கு ஏற்ப சேமிப்பு கிடங்கினை ஏற்படுத்திதர தவறியதால், ஒவ்வொரு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.