அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த திமுக...
டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை திமுக வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்க நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், அதிமுக, ஆம் ஆத்மி, இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குளிர்கால தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குறித்தும் முன்கூட்டியே விவாதிக்க்பபட்டது. மேலும் கடந்த மழைக்கால கூட்டத்தொடரை போல் இல்லாமல் குளிர்கால கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் எதிர்கட்சிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு , திமுக சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது, நீட் தேர்வு விலக்கு, வெள்ள சேதத்திற்கு பேரிடர் கால நிவாரண நிதியை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
கூட்டத்திற்கு இடையே, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பேச விடாமல் தடுத்ததாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் திடீரென கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.