திமுக எம்.பி. ரமேஷ் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு  

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில், கடலூர் திமுக எம்.பி. ரமேஷின் பெயரையும் சிபிசிஐடி போலீசார் சேர்த்துள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக எம்.பி. ரமேஷ் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு   

கடலூர் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் வேலை செய்து வந்தார். அவர், கடந்த மாதம் 19ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக மர்ம மரணம் என்று காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போராட்டம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக, இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. காடாம்புலியூர் காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோவிந்தராசுவின் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், திமுக எம்.பி. ரமேஷ் விரைவில் கைது செய்யப்படக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொலை வழக்கில் சிக்கிய ரமேஷ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கடலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக எம்.பி. ரமேஷ், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படக் கூடும் என அண்ணா அறிவாலய வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.