"எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்கவே திமுகவின் காலை உணவுத்திட்டம்" ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

"எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்கவே திமுகவின் காலை உணவுத்திட்டம்" ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க திமுக அரசு சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்றிவிட்டு, காலை சிற்றுண்டி திட்டம் என பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பாதியிலேயே வெளியேறிய மேயர்... வழிமறித்த கவுன்சிலர்கள்!

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்த போது இதனை பிச்சைக்கார திட்டம் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விமர்சித்ததாக கூறினார். ஆனால், குழந்தைகளின் பசியை போக்கும் இந்த மகத்தான திட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் திமுக அரசு தற்போது செயல்பட்டு வருவதாகவும் சாடினார். 

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார், சட்டவிரோத செயல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை ஜாமினில் எடுக்கும் திமுகவினருக்கும், குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.