பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த குழு...! மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் தகவல்..!

நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மூன்று ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள், 34 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் என்றும் டெங்கு பரவலை தடுக்க வார்டு தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் சரவணன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த குழு...! மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் தகவல்..!

நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மேயர் சரவணன் தலைமையில் மாநகராட்சியின் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. துணை மேயர் ராஜு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் நான்கு மண்டல துணை ஆணையர்கள் ஆகியோர் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திருக்குறள் வாசித்தபடி மேயர் சரவணன் கூட்டத்தில் தலைமை உரையாற்றினார். அப்போது அவர், தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி, நெல்லை மாநகராட்சியில் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக, மூன்று ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் 34 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் எனவும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளில், 42 கோடி ரூபாயில் புதிய சாலைகள் அமைப்பதற்கான மதிப்பீடுகளை தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, இருப்பினும் பல்வேறு இடங்களில் திட்ட பணிகள் முடிவடையாததால் பொதுமக்களின் அவசர போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு 12 இடங்களில் மாற்று சாலைகள் போடப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநகரப் பகுதிகளில், மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெறும். பருவமழை நேரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே நெல்லை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நான்கு மண்டலங்களிலும், வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டெங்கு இல்லா மாநகராட்சியாக உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில், சாலை குடிநீர் உட்பட பல்வேறு திட்டப் பணிகள் குறித்த தீர்மானங்கள் சுமூகமாக நிறைவேற்றப்பட்டது.