மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா? அமையாதா?
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்காலிக இடத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடரப்பட்ட இவ்வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார். மாணவர் சேர்க்கை மற்றும் தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவது குறித்து வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் கூறியதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவது குறித்து எடுக்கப்படும் முடிவை, பதில் மனுவாகத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.