சென்னை எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது..பாராட்டு விழாவில் டோனி பேச்சு

தமிழ்நாடு மற்றும் சென்னை எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது என்று பாராட்டு விழாவில் பேசிய மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை  எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது..பாராட்டு விழாவில் டோனி பேச்சு

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,

என்னுடைய முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது. சென்னை அணி, என்னை தேர்வு செய்யும் என்று நான் நினைக்கவே இல்லை.   சென்னை, தமிழ்நாடு எனக்கு அதிகமாக கற்று கொடுத்துள்ளது. சென்னை அணிக்கு தமிழ்நாட்டை தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர்.

எந்த நாட்டில் ஐபிஎல் போட்டி நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தார்கள். மிகச் சிறந்த நினைவுகளை சென்னை தந்துள்ளது. சிஎஸ்கே சரியாக செயல்படாத போதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் எனது கடைசி டி-20 போட்டி சென்னையில் தான் நடக்கும் என தெரிவித்தார்.