தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,  திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வேலூர், ராணிப்பேட்டை,  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 25ஆம் தேதி வரை லட்சத்தீவு, வடக்கு கேரளா - கர்நாடக கடலோர பகுதிகள், அரபிக்கடல், ஆந்திரா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் இன்று மற்றும் நாளையும் குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.