13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.