சசிகலா பினாமிகளின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பண மதிப்பிழப்பின் போது  சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சசிகலா பினாமிகளின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சசிகலா வீட்டில் 2017 ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 

அதன் தொடர்ச்சியாக, தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

இந்த சோதனையில் 1,600 கோடி ருபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி கங்கா பவுண்டேஷன்,  தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள்  உள்ளிட்ட பல நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர். 

இதை எதிர்த்து தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.  

அப்போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த வருமான வரித்துறை தரப்பு,  ஸ்பெக்ட்ரம் மால் விற்பனை விவகாரத்தில் பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே என வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு  தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.