தமிழகத்தின் 10 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும்.,கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 15, 16 தேதிகளில் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தெற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடற்பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.