தமிழகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு விழா கடைபிடிப்பு.. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பவனி வந்தனர்

இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன், ஜெருசலேம் நகருக்கு வீதி உலா சென்றதை நினைவு கூறும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.

தமிழகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு விழா கடைபிடிப்பு.. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பவனி வந்தனர்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட கடைசி வாரம் புனித வாரமாக கருதப்படுகிறது. மேலும் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தினர்.

கோவையில் கோவையில் பல்வேறு தேவாலயங்களில்  நடைபெற்ற  குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு  ஊர்வலமாக சென்றனர். ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா பாடலை பாடியபடி பவனி வந்தனர்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தூய சகாய மாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா நடைபெற்றது. இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று குருத்தோலைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

தூத்துக்குடியில் லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,  ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று குருத்தோலை கையில் பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு வந்தனர்.