பேருந்துகள் கொள்முதல் தொடர்பான வழக்கு - தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு?

பேருந்துகள் கொள்முதல் தொடர்பான வழக்கு - தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு?

பேருந்துகள் கொள்முதலுக்கு தடை கோரி மனு

தமிழ்நாட்டில் 1,107 நகரப் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய ஆயிரத்து 107 நகர பேருந்துகள் உள்பட ஆயிரத்து 771 பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக அக்டோபர் 10ம் தேதி டெண்டர் கோரப்பட்டது.


மாற்றுத் திறனாளிகளுக்கான பொது நல வழக்கு
 
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி மீட்டர் உயர தளத்துடன் நகர பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு பதில், 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது சட்டவிரோதமானது எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க: நளினி , ரவிச்சந்திரன் விடுதலை..! உச்ச நீதிமன்றத்தில் பரபர..!

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்துக்கு முரணாக இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கடந்த 2021ம் ஆண்டும் இதேபோல பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரிய போது அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சட்டப்படி பேருந்துகளை கொள்முதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், 900 மில்லிமீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்தில் மாற்றுத் திறனாளிகளால் ஏற முடியாது என்பதால், ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.