பட்டியலின மக்கள் மீதே வழக்கு..! நடவடிக்கை எடுக்கக்கோரி...! முதலமைச்சருக்கு சிபிம் கடிதம்...!! 

பட்டியலின மக்கள் மீதே வழக்கு..! நடவடிக்கை எடுக்கக்கோரி...! முதலமைச்சருக்கு சிபிம் கடிதம்...!! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தி்ல்  தாக்குதலுக்குள்ளான பட்டியலின மக்கள் மீது அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததற்கு நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் பஞ்சாயத்து, கோட்டையூர் கிராமத்தில் 70 தலித் குடும்பங்களும், 250க்கும் மேற்பட்ட இதர சாதியைச் சேர்ந்த குடும்பங்களும் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கு பெரும்பான்மையாக வசிக்கும் இதர சாதியினர் பல்வேறு இன்னல்களையும், தீண்டாமைக் கொடுமைகளையும் கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை, ஓட்டல்களில் பட்டியலின மக்கள் உள்ளே சென்று சாப்பிட முடியாத நிலை, அங்குள்ள ராமர் கோயில் உள்ளே சென்று வழிபட முடியாத நிலை, பொது நிகழ்வுகள், நிகழ்ச்சிகளில் பட்டியலின மக்களிடம் பணம் வசூல் செய்யாதது, குடும்ப விஷேசங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க முடியாதது உள்ளிட்டு பட்டியலின மக்கள் மீது இதர சாதியினர் நீண்ட காலமாக தீண்டாமைக் கொடுமைகளைக் கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இம்மாதம் 12.04.2023 மற்றும் 13.04.2023 ஆகிய தேதிகளில் கோட்டையூர் அருகே ஜீன்மாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு பட்டியலின மக்களும் சென்றுள்ளனர். அப்போது பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மரிலிங்கா என்பவரை இதர சாதி வகுப்பைச் சார்ந்த அருண், மோகன் ஆகியோர் மரிலிங்காவை வழிமறித்து கேலி செய்துள்ளதாகவும் இதனை தட்டிக்கேட்ட மரிலிங்காவை அவர்கள் பிளேடால் கையை அறுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்றவர்களை சகித்துக் கொள்ள முடியாத இதர சாதியினர் ஒன்று திரண்டு பட்டியலின மக்களை அரிவாள், கம்பு, கத்தியால் கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 1. மரலிங்கா, 2. ரவி, 3. மது, 4. பசம்மா, 5. அபி, 6. கங்காதரன், 7. சிவா, 8. சிவம்மா, 9. விஜயா ஆகியோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
இது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிந்தும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், கடுமையாகத் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பட்டியலின மக்கள் ஆறு பேர் மீது இ.த.ச 307வது பிரிவின் கீழ் அஞ்செட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளாக கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதானது பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என கூறியுள்ளார்.

மேலும் "தமிழ்நாடு முதலமைச்சர்  இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, கோட்டையூர் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், அவ்வூரில் இதர சாதியினர் கடைப்பிடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும், இதர சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் அஞ்செட்டி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.