முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமின்...விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமின்...விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பெண் எஸ்.பி அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்த நிலையில், தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியில்  முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்தார். அப்போது  பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி கைதில் முதலமைச்சர் பதற்றம் அடைவது ஏன் ? வீடியோ வெளியிட்டு எடப்பாடி பதிலடி!

பாலியல் புகாரில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பாலியல் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு அளித்தார். பாலியல் வழக்கில்  முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவித்ததுடன், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேப்போல், முன்னாள் எஸ்,பி கண்ணனுக்கு சிறை தண்டனை இல்லை என்றும், 500 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.