நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவிற்கு பாஜக எதிர்ப்பு: தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு...

நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவிற்கு பாஜக எதிர்ப்பு: தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு...

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும், மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்தவே தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு செயல்படுவதாகவும், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.