காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்....
ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் நேற்று இரவு ஆடு திருடர்களை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்க ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலின், உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் திருச்சி, திருவெறும்பூரில் 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.