தொண்டர்களும், பொதுமக்களும் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது...ஜெயக்குமார்

தொண்டர்களும், பொதுமக்களும் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களும், பொதுமக்களும் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது...ஜெயக்குமார்

மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை இல்லத் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

 அதிமுக பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு சர்வ வல்லமை படைத்ததாகும். ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளர க்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இனி கிளைக் கழக தேர்தல் நடக்கும். ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றார்.

ஜெயலலிதா காலத்தில் எப்படி கட்சி  நடந்ததோ அப்படிதான் தற்போது கட்சி நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக தான் தற்போது கிளை கழக தேர்தல் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளரும் , இணையும் ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகிறார்கள் என கூறினார்.

அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சி இருக்காது என கூறினார்கள். ஆனால் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என கூறிய அவர், ஒரு கோடியே 44 லட்சம் வாக்குகள் வாங்கி இருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள், இதையெல்லாம் பிடிக்காத சிலர் வேண்டும் என்று புரளி கிளப்பி விடுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

 
மேலும் கட்சி எழுச்சியாக இருக்கிறது. வலிமையாக இருக்கிறது. பலம் வாய்ந்த சக்தியாக அதிமுக இருக்கிறது. யாரோ ஒருவர் கட்சியை விட்டு போகிறார் என்றால் அதனால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை. உடலில் அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் எந்த காலத்திலும் அதிமுகவை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களால் உருவான கட்சி அதிமுக. அதிமுகவின் சொத்து தொண்டர்களும், பொதுமக்களும் தான் என்றார்.

தொண்டர்களும், பொதுமக்களும் இருப்பதால் அதிமுகவை அசைக்க முடியாது. யாரோ சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார்கள், பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தலைவராகிவிட முடியாது என கூறினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கூறி உள்ளனரே என்ற கேள்விக்கு, கூட்டணி அதே நிலையில் நீடிக்கிறது. யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம் கூட்டணிக்கு வருவதும்., வராததும் அவர்களுடைய விருப்பம் என ஜெயக்குமார் கூறினார்.