பொய் பரப்புரை செய்து வரும் போலி பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்யுங்க....இந்து அமைப்புகள் காவல் ஆணையரிடம் புகார்....!

தன்னை கடவுளின் அவதாரம் என்று பொய் பரப்புரை செய்து வரும் போலி பெண் சாமியார் அன்னபூரணி அரசு என்பவரை கைது செய்ய கோரி,5 இந்து அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பொய் பரப்புரை செய்து வரும் போலி பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்யுங்க....இந்து அமைப்புகள் காவல் ஆணையரிடம் புகார்....!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசு பொருளாகியுள்ள பெயர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை கடவுளின் அவதாரம் என்றும் ஆதிபராசக்தியின் மறுவுருவம் என்றும் கூறி குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு அருள்வாக்கு வழங்கி வருகிறார்.

இவரது யூ-டியூப் பக்கத்திலும் பல்வேறு விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது கள்ளக் காதலன் அரசு என்பவருடன் தான் வாழ்வேன் என்று தெரிவித்த விடியோவை மேற்கோள்காட்டி, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் போலிச் சாமியாராக வலம் வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அன்னபூரணி அரசு அம்மா என்பவரைக் கைது செய்யகோரி  இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக இந்து சேவா சங், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் போலிச் சாமியாராக வலம் வந்து தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி சொச்சைப்படுத்தும் பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டது.

புகார் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த பாரத் முன்னணி மாநில தலைவர் சிவாஜி கூறுகையில், தனிமனித ஒழுக்கமின்றி வாழ்ந்து வந்த பெண் தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி பொய் பரப்புரை நடத்தி மக்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

ஒருவர் தன்னை சாமியார் என்று கூறிக்கொள்வதை நாங்கள் குறைசொல்லவில்லை எனவும் கடவுளின் அவதாரம் என்று கூறுவதையே மறுக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இவ்வாறு கடவுளின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றும் அன்னபூரணி அரசு அம்மா என்பவரை மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்கத் தூண்டுதல், மதங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல் புரிதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.