கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல் அறிவிப்பு..!

கைதுசெய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல் அறிவிப்பு..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வரும் 18 ஆம் தேதி சாலை மறியலில்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம்  மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன் தினம்  சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மூன்று விசைப் படகுகளை பறிமுதல் செய்து அந்த படகுகளில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதேபோல்,  தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்து அதிலிருந்து 15 மீனவர்களை கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் வரும் 18 ஆம் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தூத்துக்குடியில் ஐந்து நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  வந்த விசைப்படகு தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீன்பிடிக்கச் சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 260 விசைப்படகுகளில் பணியாற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் விசைப்படகுகளை இயக்கக் கோரி விசைப்படகு தொழிலாளர் கடந்த 10 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, விசைப்படகு உரிமையாளர்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 208 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதையும் படிக்க   | கல்லூரியில் குடிநீர் தொற்றால் விடுதி மாணவிகளுக்கு நடந்த விபரீதம்..!